இந்திய பிரதமர் மோடி இன்று மேற்கு வங்கத்தில் பல்வேறு ரயில் மற்றும் சாலை உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டிற்கு அர்பணித்தார். மால்டாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர், ஹவுரா மற்றும் குவஹாத்தி இடையேயான இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் சிறப்பு அம்சங்கள் :
* இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 180 கிமீ வேகத்திற்கு செல்லும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக சுமார் மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* இந்த ரயில் 99% கிருமிகளைக் கொல்லும் திறன் கொண்ட மேம்பட்ட கிருமிநாசினி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. மேலும் அனைத்து பயணிகளுக்கும் புதுப்பிக்கப்பட்ட கைத்தறி மற்றும் துண்டுகள் வழங்கப்படுகின்றன.
* இந்த ரயிலில் உள்நாட்டு கவாச் (KAVACH) தானியங்கி பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
* இந்த ரயில் பிரீமியம் விமான சேவைகளைப் போலவே உள்ளூர் உணவையும் பயணிகளுக்கு வழங்குகிறது. கவுகாத்தியிலிருந்து ஹவுராவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு அசாமிய உணவு வகைகள் வழங்கப்படும், அதே போல ஹவுராவிலிருந்து கவுகாத்திக்கு பயணிப்போருக்கு வங்காள உணவுகள் அளிக்கப்படுகிறது.
* இந்த ரயிலில் பயணக் கட்டணமானது குளிா்சாதன 3-ஆம் வகுப்புக்கு ரூ.2,300 வரையிலும், குளிா்சாதன 2-ஆம் வகுப்புக்கு ரூ.3,000 வரையிலும், குளிா்சாதன முதல் வகுப்புக்கு ரூ.3,600 வரையிலும் இருக்கும். இரு நகரங்கள் இடையே விமானக் கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை உள்ளது.
* இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த ரயிலானது 823 பேர் பயணிக்க கூடிய 16 பெட்டிகளைக் கொண்டுள்ளது. இதில் 11 மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகள், நான்கு இரண்டாம் வகுப்பு ஏசி பெட்டிகள் மற்றும் ஒரு 1 ஆம் வகுப்பு ஏசி பெட்டி ஆகியவை அடங்கும்.








