இயக்குநர் ஞானவேலின் ஜெய் பீம் திரைப்படத்தில் சூர்யா பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். சில எதிர்ப்புகளை சம்பாதித்தாலும் படம் அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டுகளை குவித்தது.
இந்தப் படம் ஒரு வருடத்திற்கு முன்பு வெளிவந்தது. ஆனால் அது வெளியானதில் இருந்து தற்போது பாராட்டுகளை தொடர்ந்து பெற்ற வண்ணமே உள்ளது. சீனாவில் பெய்ஜிங் திரைப்பட விழா 2022 இல் இந்தப் படம் திரையிடப்பட்டது. தொடர்ந்து பாராட்டுகளைப் பெற்று வெற்றிப் படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறது.
முன்னதாக, 12வது பெய்ஜிங் சர்வதேச திரைப்பட விழாவில் தியான்டன் விருதுக்கு இந்த படம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக “ஜெய் பீம்” தயாரிப்பாளர்கள் ஏற்கனவே அறிவித்திருந்தனர்.
படம் பார்த்த சீனர்கள் படம் தங்கள் மனதை தொட்டுவிட்டதாக உருக்கத்துடன் தெரிவித்தனர். சந்துரு கதாபாத்திரமும், செங்கேணி கதாபாத்திரமும் தங்களுக்கு மிகவும் பிடித்ததாக தெரிவித்தனர்.
படம் பார்த்துக் கொண்டிருந்தபோது சில காட்சிகளில் சீன இளைஞர்களும், இளம் பெண்களும் கண்ணீர் விட்டு அழுதனர்.
மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா சமீபத்தில் நடந்து முடிந்தது. அதிலும் “ஜெய் பீம்” திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது.
கூகுள் இந்தியா தனது ‘year in Search’ அதாவது ஆண்டு தேடுதல் முடிவுகளை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த முடிவுகளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்திருந்தது.
முதலமைச்சர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் ஜெய் பீம் படத்தை வெகுவாகப் பாராட்டினர்.
மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற ஜெய் பீம், உலக அளவில் பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு தமிழ் திரையுலகத்திற்கு பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.








