சென்னையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. விழாவையொட்டி ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும், ரேஷன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத் தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், பொங்கல் பரிசு தொகுப்புடன் முழு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், கரும்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, 6 அடி நீளம் கொண்ட முழு கரும்பும் பொங்கல் பரிசுடன் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதற்காக தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 429 கோடி நிதியை ஒதுக்கியது. மொத்தம் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் தடையில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. பொங்கல் பரிசுக்கான டோக்கன்கள் ஏற்கனவே விநியோகிக்கபட்டுள்ளன.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார். பொதுமக்கள் 20 பேருக்கு 6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வினியோக பணிகள் தொடங்க உள்ளது.