கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் விவசாய கிணற்றில் ஒயர் திருடிய வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அடித்த பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக 20-க்கும் மேற்பட்டவர்களின் விவசாய கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின் மோட்டாரின் ஒயர்கள்
திருடு போய்க்கொண்டிருந்தது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் விவசாய கிணற்றில் அமைக்கப்பட்டிருந்த மின்மோட்டார் ஒயரை வாலிபர் ஒருவர் திருடிக்கொண்டிருந்தார் இதைபார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று அந்த வாலிபரை மடக்கப்பிடித்தனர்.
பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்த நிலையில் அவர் தனது உடலில் ஒயரை சுற்றிவிட்டு அதன்மேல் சட்டையை அணிந்திருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த வாலிபரை அப்பகுதியில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். சுமார் 2 மணி நேரம் அந்த வாலிபரை கம்பத்தில் கட்டி வைத்து அவ்வழியாக செல்பவர்கள் சரமாரியாக தாக்கியதால் அந்த வாலிபர் பலத்த காயமடைந்தார்.
அந்த வாலிபரை தாக்குவதில் ஆர்வத்துடன் இருந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வர கால தாமதமானதால், பொதுமக்கள் அந்த வாலிபரின் கை கால்களை முறிக்கும் நிலைக்கு உதைத்தனர். பிறகு சம்பவ இடத்திற்கு வந்து கள்ளக்குறிச்சி போலீசார் அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பெருங்கூர் கிராமத்தை சேர்ந்த சரத்குமார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.







