சென்னையில் தண்ணீர் தேங்கக்கூடாது என்பதே எங்களது நோக்கம் என மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த ஆண்டு மாநகரப்பகுதிகளில் அதிக மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. பல்வேறு துறைகள் மூலமாக பல்வேறு முயற்சிகள் மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டது. மேலும், மழைநீர் வடிகால் பணிகள், நெடுஞ்சாலை துறை மூலமாகவும் மழைநீர் வடிகால் நீர்வளத்துறை மூலமாகவும் தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது என்றார்.
ஒரே வருடத்தில் 964 கி.மீ மழைநீர் வடிகால் பணிகள் மாநகராட்சி மூலமாக நடைபெறுகிறது. சிங்கார சென்னை திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பெரும்பாலான வேலைகள் முடிவடைந்துள்ளது. நீண்ட கால பணிகளும் நடைபெற்று வருகிறது.
ரூ.4,098 கோடி மதிப்பீட்டில் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான வேலைகளை நாளுக்கு நாள் ஆய்வு செய்து வருகிறோம். நீர்வளத்துறை மூலமாக பலவருடங்களாக தூர்வாராத பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

நீண்ட காலமாக தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த தடவை தண்ணீர் தேங்கக்கூடாது என்பது நோக்கம். மும்பை, டெல்லி, நியூயார்க், வாஷிங்கடனில் கூட அதிக மழை பெய்தால் தண்ணீர் தேங்கும். மற்றொரு துறையின் மூலமாக நடைபெற்ற பணியில் சோகமான அசாம்பாவிதம் நடைபெற்றுள்ளது. காங்கிரீட் பணிகள் நடைபெறும்போது தடுப்புகளை அகற்றலாம். மற்ற நேரங்களில் தடுப்புகள் இருக்க வேண்டும். மக்கள் கூட விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் The system may not be perfect என தெரிவித்தார்.
பணிகளில் தடுப்புகளை அகற்றினால் பொதுமக்கள் தடுக்க வேண்டும். அதிகாரிகளை அழைக்க வேண்டும். இது தொடர்பாக பொதுமக்கள் 1913 வழியாக புகார்களை தெரிவிக்கலாம். அரசு பொதுமக்கள் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும் என்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.







