அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கையில் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மாமன்னர்கள் மருது சகோதரர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரையில் தமிழ்
சங்கம் ரோட்டில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர்கள் மருது சகோதரர்கள். மருது சகோதரர்களின் நினைவிடம் அமைத்தது, அரசு விழாவாக அறிவித்தது, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு தான்.
அனைத்து சுதந்திர போராட்ட தியாகிகளுக்கும் அதிமுக சார்பில் மரியாதை செலுத்தி வருகிறோம். வேறு எந்த கட்சிக்கும் இந்த பெருமை இல்லை. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு 13.5 கிலோ தங்கக்கவசம் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அதிமுக பொருளாளராக யார் இருக்கிறார்களோ, அவர்களே தங்கக் கவசத்தை பெற்று ஒப்படைக்க வேண்டும் என்ற நடைமுறை பின்பற்றப்பட்டது.
கடந்த 2017ம் ஆண்டு, இதேபோல் கட்சியில் பிரச்னை ஏற்பட்டபோது, நடுநிலையாக
இருதரப்புக்கும் பிரச்னையின்றி ராமநாதபுரம், மதுரை மாவட்ட ஆட்சியர்களிடம் அந்த தங்கக் கவசத்தை ஒப்படைத்தனர். அது போன்ற நிலை தற்போது இல்லை.
தற்போதைய நிலையில் அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம், அதிமுகவால் வழங்கப்பட்டது. அதனை அதிமுக பொருளாளர் கையெழுத்திட்டு எடுத்து செல்லலாம். எனவே திண்டுக்கல் ஸ்ரீனிவாசன் கையில் தான் தங்கக் கவசத்தை கொடுக்க வேண்டும். தற்போது தங்க கவசம் யார் பெறுவது என்பது குறித்த வழக்கு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி நடுநிலையோடு செயல்படுவோம்” என்று கூறினார்.







