தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக இன்று தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் நிதிநிலை அறிக்கையில் என்னென்ன அம்சங்களை விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளிலிருந்தே வேளாண் துறை குறித்த பிரச்னைகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தபடி, சட்டப்பேரவையில் வேளாண் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்படுகிறது. இதில், விவசாயிகள் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கான பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நெல் குவிண்டால் ஒன்றுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும், கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் என்பதே டெல்டா மாவட்ட விவசாயிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களும் முறையாக தூர்வாரப்பட்டு, பாசனத்திற்கான நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலான திட்டங்கள் மற்றும் தரமான விதைகள், உரம் உள்ளிட்டவற்றை வேளாண் துறை சார்பிலேயே வழங்கும் திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வேளாண் நிதிநிலை அறிக்கை இருக்கும் என்பதே விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது.







