ஈரோடு இடைத்தேர்தலில், எங்கள் கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு, மூன்று நாட்களில் தெரியவரும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், அதிமுகவின் கிளைக் கழக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.சண்முகநாதன், கே.வி.ராமலிங்கம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், “அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு சந்திக்கும் முதல் இடைத்தேர்தல் இது. தேர்தல் களத்தில் முடிவுகள் எப்படி வருகிறது என்பதை தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருக்கின்ற தமிழர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு பெரிய மாற்றத்தை எதிர்காலத்தில் உருவாக்கும் தேர்தலாக இந்த இடைத்தேர்தல் அமையும். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக சந்திக்கும் இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம். தமிழகத்தில் இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். அதிமுக, இந்த தேர்தலில் தனித்தே களம் இறங்கி இருக்கின்றோம். கூட்டணியில் யார் யார் வருகிறார்கள் என்பது இரண்டு மூன்று நாட்களில் தெரியவரும். இந்த வெற்றி என்பது ஒரு சரித்திர வெற்றியாக இருக்கும்.
அணிகள் பிரிந்து இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் 98.5 சதவீதம் பேர் எங்களுடன் தான் இருக்கிறார்கள். நேற்று முதல் களப்பணியை தொடங்கி விட்டோம். பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருக்கக்கூடிய நிர்வாகிகள் களத்தில் இறங்கி தேர்தல் பணியை தொடங்கிவிட்டனர். அமைதியான முறையில் இந்த தேர்தல் பணியில் ஈடுபடுவோம்.
இரட்டை இலை சின்னம் குறித்து இரண்டு மூன்று நாட்களுக்குள் ஒரு நல்ல முடிவு கிடைக்கும். ஓபிஎஸ் ஆலோசனைக் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார். எங்களை பொறுத்தவரை, எங்களுக்கு சின்னம் கிடைக்கும் என முழுமையாக நம்புகிறோம். களப்பணிகளில் அதிமுக என்றும் சோர்ந்ததில்லை. பாஜக, கூட்டணிக்கு வருவதை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணியில் யார், யார் இருக்கிறார்கள் என்பதையும் பொறுத்திருந்து பாருங்கள்.
வீடு வீடாகச் சென்று வாக்காளர்களை சந்திக்கும் பணியை தொடங்கி இருக்கின்றோம். மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதையும் ஆய்வு செய்து வருகின்றோம். இஸ்லாமிய பெருமக்களுக்கு அதிமுக பல்வேறு உதவிகளை செய்திருக்கிறது. ஹஜ் பயணத்திற்கு செல்பவர்களுக்கான நிதி பள்ளிவாசலை சீரமைப்பதற்கு நிதி, ரம்ஜான் நோன்பிற்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. டிசம்பர் 6ஆம் தேதி அச்சத்தை உருவாக்கும் நாளாகவே இருக்கிறது. அதிமுக சிறுபான்மை மக்களை பாதுகாத்து வருகிறது” என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.