குரோம்பேட்டை வைஷ்ணவா கல்லூரியில் நடைபெற்ற போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் நடிகர் தாமு கலந்து கொண்டு பேசினார். அப்போது நடைபெற்ற பிராத்தனையில் மனம் உருக்கும்படி பேசிய தாமுவின் பேச்சுக்கு மாணவிகள் கண்ணீர் வடித்தனர்.
தமிழகத்தில் போதையால் அதிக அளவு குற்றங்கள் நடைபெற்று வருவதால் அதனைத் தடுக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் காவல் துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் முருகேசன் தலைமையில் குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நகைச்சுவை நடிகர் டாக்டர்.தாமு மாணவிகளுக்கு போதை தடுப்பு குறித்து பல்வேறு விளக்கங்களை அளித்து மனதை நெகிழ்ச்சியூட்டும் முறையில் எடுத்துரைத்து இந்த நாட்டுக்கும், நம்மை பெற்றவர்களுக்கும் நாம் நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டும் அதற்கு நாம் போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க அனைவரும் இந்த நாளில் சபதம் ஏற்போம் என்று மாணவிகள் மத்தியில் பேசினார். அப்போது நடைபெற்ற பிராத்தனையில் மனம் உருகும்படி பேசிய தாமுவின் பேச்சுக்கு மாணவிகள் கண்ணீர் வடித்தனர்.







