32.5 C
Chennai
April 25, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம் பக்தி

முருகன் கோயில்களில் களைகட்டும் தைப்பூச திருவிழா! திரளான பக்தர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று தைப்பூச திருவிழா நடைபெற்றது. இந்த தை பூச விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமானோர் பாதயாத்திரையாக வந்தும், அழகு குத்தியும், காவடி எடுத்தும் அங்க பிரதட்சணை செய்தும் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதிகாலை ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 – மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை மற்றும் பல்வேறு கால பூஜைகள் தொடர்ந்து நடைபெற்றன.

இதனையடுத்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நடைபெற்றது. அதன்பிறகு உச்சி கால அபிஷேகம், மதியம் 12 மணிக்கு உச்சி கால தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சண்முக விலாஸ் மண்டபத்தில் வைத்து சுவாமி அஸ்திர தேவருக்கு பால் , தயிர் , சந்தணம், இளநீர், மற்றும் பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 12 வகையான சிறப்பு அபிசேகமும், தீபாராதனையும் காட்டப்பட்டது.

இதேபோல் மதுரை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலும், பக்தர்களால் அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடு என்று கொண்டாடப்படும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இன்று பழனியில் தைப்பூசத் தேரோட்டம் துவங்கியது . அருள்மிகு முத்துக்குமாரசுவாமி- வள்ளி,தெய்வானை சமேதராக நான்கு ரதவீதிகளிலும் தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். தேரை கோவில் யானை கஸ்தூரி பின்னால் இருந்து தள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம்பிடித்து தேரை இழுத்து வலம் வருகின்றனர். கடந்த 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த தைப்பூச விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். காவடி எடுத்தும், மொட்டை அடித்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி வருகின்றனர். இந்த விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக பிப் 07-ஆம் தேதி தெப்பத்தேரோட்டமும், தொடர்ந்து கொடியிறக்க நிகழ்ச்சியும் நடைபெறும்.

இதேபோல் முருகப்பெருமானுக்கென்று பிரசித்திபெற்ற திருப்பரங்குன்றம்,சுவாமிமலை, சோலைமலை ஆகிய கோவில்களிலும் தைப்பூச பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இங்கும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு காவடி எடுத்தும், மொட்டை அடித்தும்,அங்க பிரதட்சணை செய்தும் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் இந்த தைப்பூச நிகழ்வில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தால் வருடம் முழுவதும் சிறப்பான வாழ்வு அமையும் என்ற நம்பிக்கை உள்ளதால், தமிழகத்தில் சென்னை வடபழனி, மருதமலை போன்ற கோவில்களிலும் தைப்பூச விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மருதமலை முருகன் கோவிலிலும் தைப்பூச விழா நடைபெற்று வருகிறது. இன்று கோவிலில் காலை ஊஞ்சல் உற்சவம், இரவு தெப்பத் திருவிழா ஆகியன நடத்தப்பட உள்ளது. இதை காண லட்கணக்கான பக்தர்கள் மருதமலை கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோவிலின் மலை அடிவாரம் வரை மட்டுமே வாகனங்கள் செலுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலை அடி வாரத்தில் இருந்து, கோவில் வரை பக்தர்களை ஏற்றிச் செல்ல கோவில் நிர்வாகத்தின் சார்பில் மினி பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யும் பாதை உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தைப்பூச நிகழ்விற்காக அந்தந்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் , ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading