தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பாக, புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாகப் பணியாற்றி வருபவர்கள், முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு TRB-ஆல் நடத்தப்பட்ட சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொண்டவர்கள், பள்ளிக்கு அருகே வசிப்பவர்கள், மாவட்டத்துக்குள் வசிப்பவர்கள் ஆகிய தகுதிகளின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கி தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொள்ள வேண்டும்.
காலிப் பணியிடங்களின் விவரங்கள் அனைத்தையும் இன்று அந்தந்தப் பள்ளி வாரியாக அறிவிப்பு பலகையில் வெளியிட வேண்டும். தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் வரும் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். சரிபார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தையும் 6ஆம் தேதி இரவு 8 மணிக்குள் பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆசிரியரின் பணி திருப்தி அளிக்கவில்லை எனில், உடனடியாக பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு தடையில்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா







