தமிழ்நாடு முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வாழிபாட்டுத் தலங்களை திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பானது 3,000க்கும் கீழே குறைந்துள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வாழிபாட்டுத் தலங்களை திறக்க மாநில அரசு அனுமதியளித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது குறித்து வெளியிடப்பட்டடுள்ள அறிவிப்பில், இன்று(வியாழக்கிழமை) முதல் ஏற்கெனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் இரவு 10 மணி வரை இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
மேலும், அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியளிக்கப்படுகிறது.
அதே போன்று, அனைத்து தனிப்பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ஆகியவயும் இன்று முதல் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
மேலும், மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்களை நடத்தவும், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள், மழலையர் விளையாட்டு பள்ளிகள், நர்சரி பள்ளிகள், அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்படவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 நபர்கள் வரை பங்கேற்கவும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 50 நபர்கள் கலந்து கொள்வதற்கும் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள், அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை நீட்டிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.