எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் மற்றும்; சிவனேசன் ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு மீன்பிடி விசைப்படகுகளில் நேற்று 23 பேர் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக வழக்கு பதிவு செய்து இரண்டு படகுகளையும் அதிலிருந்த அகத்தியன், சிவராஜ், சிவசக்தி, சம்பத், கந்தன், முருகன், உள்ளிட்ட 23 மீனவர்களையும் கைது செய்து இலங்கை காரைநகர் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.
பின்னர் மீனவர்களின் படகுகளை மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தினர். சிறைபிடிக்கப்பட்ட 23 மீனவர்களுக்கும் முதல் கட்டமாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையின் முடிவு கிடைக்கும் வரை 14 நாட்கள் மீனவர்களை தனிமைப்படுத்த யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர் சம்பந்தப்பட்ட அறிக்கையை மட்டும் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
கடந்த மார்ச் மாதத்திற்கு பின்னர் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








