டெல்லியில் இருந்து கூரியர் மூலம் போதை மாத்திரைகளை வாங்கி, தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் செலுத்திக்கொண்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக இளைஞர்கள் சிலர் போதை மாத்திரைகளை பயன்படுத்துவதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அந்தியூர் கருப்பசாமி கோவில் பகுதியில் இளைஞர்கள் சிலர், வித்தியாசமான முறையில் போதை மருந்தை எடுத்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். சில இளைஞர்கள், சிரஞ்சி மூலம் போதை ஊசி செலுத்திக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர். அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிடிபட்ட இளைஞர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த சந்தோஷ் குமார், சசிகுமார், யுவராஜ், விக்னேஷ் மற்றும் யுவராஜ் ஆகியோர், டெல்லியில் இயங்கிவரும், நிறுவனம் ஒன்றிலிருந்து, கூரியர் மூலம், 100 எண்ணிக்கைகள் கொண்ட போதை மாத்திரைகளை வாங்கியுள்ளனர். அதனை கருப்பசாமி கோவில் அருகே சென்று தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் கைகளில் செலுத்தி கொண்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் ரூபாய் 14 ஆயிரம் செலுத்தி மருத்துவரின் பரிந்துரை இன்றி மாத்திரைகளை வாங்கி போதைக்காக பயன்படுத்தியது தெரியவந்தது. இவர்கள் பயன்படுத்தியது மட்டுமின்றி அந்தியூர் பகுதியில் விற்க முயற்சி செய்துள்ளனர். பின்னர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விற்பனைக்காக வைத்திருந்த 100 மாத்திரைகள் கொண்ட பத்து அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து, இளைஞர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். போலீசார் சுற்றி வளைத்த போது அங்கிருந்து தப்பி ஓடிய பாலாஜி மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு இளைஞர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல் நேற்று சித்தோடு பகுதியில் வினித்குமார் மற்றும் திலீப்குமார் ஆகிய இரண்டு இளைஞர்கள் போதை மாத்திரை வாங்கி பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்டனர். போதை மாத்திரை புழக்கம், ஈரோடு மாவட்டத்தில் அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
– இரா.நம்பிராஜன்









