தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தொற்று பரவலை கட்டுப்படுத்த நேற்று முதல் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருந்தது.
இந்த நேரத்தில் அவசியமின்றி வெளியில் சுற்றுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வருபவர்கள் அதற்கான ஆவணங்களை உடன் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 490 இடங்களில் தடுப்புகள் அமைத்து, 10 ஆயிரம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பயணிகளின் தேவைக்காக தடையின்றி பேருந்துகள் இயக்கப்பட்டது. முகக்கவசம் அணிந்தவர்கள் மற்றும் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இரவு நேரங்களில் வெளியே சுற்றி திரிந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என வாகன ஓட்டிகளை எச்சரித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
சென்னை வேளச்சேரி ஜிஎஸ்டி சாலை பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். மேலும், வெளியில் தேவையின்றி சுற்றும் பொதுமக்களுக்கு முதல் நாள் என்பதால் பல இடங்களில் எச்சரிக்கை செய்து அனுப்பப்பட்டனர். இதேபோல தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.








