நீட் தேர்வு வேண்டாம் என பாஜக மாநில தலைவர் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகளும் அப்போது உடனிருந்தனர். இதுபோலவே, மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்திலும் அமைச்சர், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “4 வாரங்களுக்குத் தேவையான 3 லட்சம் கவச உடைகள் கையிருப்பில் உள்ளன, 75 லட்சம் சர்ஜிகல் மாஸ்க் கையிருப்பில் உள்ளது. அடுத்த ஒரு மாதத்துக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் கையிருப்பில் உள்ளன. 9,520 ஆம்போடெரிசின் மருந்துகள் இப்போது வந்துள்ளன. தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கியது போக, 3,234 ஆம்போடெரிசின் கையிருப்பில் உள்ளது” என்று விவரித்தார்.
கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்களுக்கு உயிர் காக்கும் மருந்துகள் உடனடியாக அனுப்பப்படுகிறது என்ற அமைச்சர், தமிழ்நாட்டுக்கு நீட் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் மத்திய அரசிடம் பேசி அறிவித்தால் உடனடியாக வரவேற்கிறோம் என்றார். மேலும், எந்த அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பதை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்போம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.







