ஊரடங்கு காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடை நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனத் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 18 வயதிற்கு உள்பட்ட மாணவர்களைப் பள்ளியில் சேர்ப்பதற்கு வீடு வாரியாக ஆய்வு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், குழந்தைத் திருமணம் செய்து கொண்டு இடையில் நின்ற 511 மாணவிகளை ஆசிரியர்கள் கண்டறிந்துள்ளனர். அவர்களை மீண்டும் அழைத்து வந்து பள்ளியில் சேர்த்துள்ளனர். அதேபோன்று கொரோனா தாக்கத்தினால் மாணவர்கள் குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமையின் காரணமாகப் படிப்பை நிறுத்தி விட்டு விலகிச் சென்றுள்ளனர். அவர்களும் கண்டறியப்பட்டு பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாணவிகள் திருமணத்தைப் பொருத்தவரை எட்டாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர் திருமணம் நடத்திவைத்துள்ளனர். அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக அதிக அளவில் நடைபெற்று வந்த குழந்தைத் திருமணங்கள் குறைந்திருந்தன. ஆனால், தற்போது பள்ளிக் கல்வித் துறை நடத்திய ஆய்வில் குழந்தை திருமணங்கள் நடைபெற்று உள்ளது தெரிந்துள்ளது.
11ம் வகுப்பில் 417 மாணவிகளும், 12ம் வகுப்பில் 2 மாணவிகளும், 10ம் வகுப்பில் 45 மாணவிகளும், 9ம் வகுப்பில் 37 மாணவிகளும் குழந்தை திருமணம் செய்து கொண்டுள்ளனர். மேலும் 13 வயதைக் கடந்த 8ம் வகுப்பு மாணவிகள் 10 பேருக்கும் குழந்தை திருமணங்கள் நடத்தப்பட்டிருந்தது பள்ளிக்கல்வித் துறையின் ஆய்வில் கண்டறியப்பட்டது.