கோவின் இணையதளத்தில் இன்னும் 2 நாட்களில் தமிழ் மொழி இணைக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யும் Cowin இணையதளம் ஆங்கிலத்திலும் இந்தியிலும் மட்டுமே இருந்த நிலையில், புதிதாக 9 மொழிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மராத்தி, மலையாளம், பஞ்சாப், தெலுங்கு, குஜராத்தி, அசாமி, வங்காளம், கன்னடம், ஒடியா ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆனால், அதில் தமிழ் மொழி சேர்க்கப்படவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், சு.வெங்கடேசன் எம்.பி உள்ளிட்டோர் அதிருப்தியை தெரிவித்தனர். இந்நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்குள் தமிழ் மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுபற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய அரசின் கோவின் இணையதளத்தில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே இருந்த நிலையில் இன்று புதிதாக ஒன்பது மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளபோது, தமிழ்வழியில் அந்த இணையதளத்தைப் பயன்படுத்திட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
இந்நிலை உடனடியாக சரிசெய்யப்பட வேண்டும் என ஒன்றிய அரசிடம் வலியுறுத்துமாறு மக்கள் நல்வாழ்வுத்துறையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். இதன்படி இந்தக் கோரிக்கையை ஒன்றிய அரசு அலுவலர்களிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலர் வலியுறுத்தினார். அப்போது, இந்த இணைய வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதன் அடுத்தக் கட்டத்தில் இரண்டு நாட்களுக்குள் தமிழ்மொழியிலும் இந்த வசதி செயல்படுத்தப்படும் என ஒன்றிய அரசின் சார்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.







