திமுக ஆட்சி அமையப்பெற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது மானவச் செல்வங்களின் கல்வி மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகிறது. மாணவ, மாணவியரின் கல்வி மீது கவனம் செலுத்தாத திமுக அரசுக்கு அதிமுக சார்பில் கண்டனம் தெரிவிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2022-ம் ஆண்டு கல்வி தகுதிநிலை அறிக்கையில், தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்துகொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை எச்சரிக்கை விடும் அளவுக்கு குறைந்துள்ளதாகவும், ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில் நான்கில் ஒருவரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு தமிழ் பாடத்தை வாசிக்க முடிகிறது என்றும் ஒன்றாம் வகுப்பு பயிலும் பெரும்பாலான மாணவர்களால் எழுத்துக்களை படிக்க இயலவில்லை என்றும் இதே நிலை தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளிலும் நீடிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 920 கிராமங்களில் உள்ள 3 முதல் 16 வயது வரையிலான 3,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் ஒன்றாம் வகுப்பு பயிலும் 42 விழுக்காடு மாணவர்களால் 1 முதல் 9 வரையிலான எண்களைக்கூட படிக்க இயலவில்லை என்றும், இதேபோன்று ஆங்கில வார்த்தைகளை படிக்கும் திறன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே வெகுவாக குறைந்துவிட்டதாகவும், ஒன்றாம் வகுப்பு பயிலும் 53 விழுக்காடு மாணவ, மாணவியர் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் 23 விழுக்காடு மாணவ மாணவியரால் ஆங்கிலத்திலுள்ள பெரிய எழுத்துகளை கூட படிக்க இயலவில்லை என்றும் வாசிக்கும் திறனும் கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கல்வி அறிவில் தேசிய சராசரிக்கு கீழ் தமிழ்நாடு உள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது.
மாணவ, மாணவர்களிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை குறைந்ததற்கு கொரோனா தொற்று நோய் காரணமாக கூறப்பட்டாலும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் அதிகரித்துக் கொண்டே போவதும், கல்விக் கொள்கை குறித்து ஒரு திடமான முடிவை அறிவிக்காததுதான் இதற்கு முக்கிய காரணங்களாகும். திமுக ஆட்சி அமையப்பெற்று 20 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும் மாநிலக் கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவச் செல்வங்களின் கல்வி மீது திமுக அரசுக்கு அக்கறை இல்லை என்பதை தெள்ள தெளிவாக உணர்த்துகிறது. இந்த நிலை நீடித்தால் மாணவ, மாணவியரிடையே எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்.
’திராவிட மாடல்’ என்று சொல்லிக்கொண்டு நேரத்தை வீணடிக்காமல் வாசிக்கும் திறன், கணித திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை முதலமைச்சர் உடனடியாக எடுக்க வேண்டும். இவ்வாறு தனது அறிக்கையில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.







