தமிழ்நாடு சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் முடிவடைந்த நிலையில் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஏப்ரல் 21-ம் தேதியுடன் முடிவடைந்து, தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் மு.அப்பாவு அறிவித்தார். சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டால் மீண்டும் 6 மாதங்களில் கூட்டப்பட வேண்டும். இதன்படி அக்டோபர் 9-ம் தேதி சட்டப்பேரவை கூடுவதாக, கடந்த மாதம் 20-ம் தேதி பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
அதன்படி தமிழ்நாடு சட்டப் பேரவை திங்கள்கிழமை கூடியது. இந்த கூட்டத்தில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்குத் தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட மத்திய அரசை வலியுறுத்தி பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் மகளிர் உரிமை தொகை , சிறைவாசிகள் விடுதலை, பத்திரப்பதிவு ஆகியவற்றின் மீதான கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்டவை கொண்டுவரப்பட்டு கேள்வி நேரம் நடைபெற்றது.
மேலும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் மயிலாடுதுறையை சேர்ப்பதற்கான மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து சட்டப்பேரவைவை மறுதேதி குறிப்பிடாமல் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஒத்திவைத்தார்.







