முதலீடுகளை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்களில் முதலீடு செய்ய உலகளாவிய முதலீட்டாளர்களுக்கான இணையதளத்தை, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பட்டியல் இனத்தவர் புத்தொழில் முனைவோர்களாகும் வகையில், 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அனைத்து விதமான தொழில்களும் வளர வேண்டும் என்றும், அவை அனைத்து மாவட்டங்களுக்கும் பரவ வேண்டும் எனவும் அவர் கூறினார்.
முதலீடுகளை ஈர்ப்பதில் மூன்றாவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளதாக பெருமிதம் தெரிவித்த முதலமைச்சர், கடந்தாண்டு முதலீடுகள் முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு 1 புள்ளி 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.







