சென்னையில் இன்றும், நாளையும் அதி கனமழை பெய்யும் என சிவப்பு வண்ண எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன், கடந்த 24 மணி நேரத்தில் அதி கனமழை 5 இடங்களிலும், மிக கனமழை 21 இடங்களிலும் கனமழை 40 இடங்களிலும் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு- வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளை கடலூர் அருகே கரையை கடக்கும் என குறிப்பிட்டார். அப்போது, வடகடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மணிக்கு 30 கி.மீ வேகத்தில் தரைக்காற்று வீசும் என தெரிவித்தார். இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதி கனமழை பெய்யும் என சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுத்தார்.
தமிழ்நாட்டில் தற்போது வரை 28 செ.மீ மழையை எதிர்பார்த்த நிலையில் 51 செ.மீ மழை பெய்துள்ளதாக கூறினார். சென்னையில் மட்டும் 41 செ.மீ மழையை எதிர்பார்த்த நிலையில், 51 செ.மீ மழை பெய்துள்ளதாக தெரிவித்தார். தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, மத்திய மேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று வீசவுள்ளதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் பாலச்சந்திரன் அறிவுறுத்தினார்.