“உலக நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு தமிழ்நாடு முன்னேறியுள்ளது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

உலக நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை அருகே ரூ.9000 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்ட டாடா கார் தொழிற்சாலையில் உற்பத்தி தொடங்கப்பட்டது. பனப்பாக்கத்தில் டாடா நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் சொகுசு கார்கள் உற்பத்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை பார்வையிட்டார். இதையடுத்து டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் ரேஞ்ச் ரோவர் காரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓட்டி மகிழ்ந்தார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, கார் உற்பத்தி ஆலையில் உள்ள ரத்தன் டாடா சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்துக்கு இன்று பொன்னான நாள். டாடா நிறுவனம் 9,000 கோடி முதலீட்டில் 5000பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தை ராணிப்பேட்டைக்கு தந்ததற்காக தனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். டாடா நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டுக்கு ஆழமான உறவு உள்ளது.

இந்தியாவின் மின் வானக உற்பத்தியின் தலைநகரம் தமிழ்நாடு. வளர்ந்து வரும் புதிய துறைகளில் நாம் சிறந்து செயல்பட வேண்டும். அனைத்து துறைகளில் பன்முகபடுத்தப்பட்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. ஏற்கனவே உள்ள துறைகளில் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். திராவிட மாடல் அரசின் செயல்பாடுகளை உலக அளவில் எடுத்து சொல்ல சில மாதங்களில் மாநாடு நடத்தப்பட உள்ளது.

உலக நாடுகளோடு போட்டி போடும் அளவிற்கு தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது. எந்த துறையில் டாடா நிறுவனம் முதலீடு செய்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும். டாடா நிறுவனத்தின் புதிய தொழிற்சாலைகள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.