பொன்முடி விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு! உடனடியாக விசாரிக்க கோரிக்கை!

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆ.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  மேலும், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்துள்ளது.  சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி…

பொன்முடி விவகாரத்தில் ஆளுநர் ஆ.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.  மேலும், இந்த மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்துள்ளது. 

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற பொன்முடி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் அவரது தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டது.  இதன் காரணமாக அவர் மீண்டும் எம்.எல்.ஏ. ஆகி உள்ளார்.  இதன் காரணமாக திருக்கோவிலூர் தொகுதி காலியிடம் என்று தேர்தல் கமிஷனில் அறிவிக்கப்பட்டிருந்தது ரத்து செய்யப்பட்டு விட்டது.

பொன்முடி எம்.எல்.ஏ.வாக வந்துள்ள நிலையில் அவரை மீண்டும் அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்தார்.  இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார். ஆனால் இந்த கடிதத்துக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த வியாழக்கிழமை டெல்லி சென்று சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழலில் புதிய அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க சட்டத்தில் இடம் உள்ளதா? அதில் என்னென்ன காரணங்கள் கூறப்பட்டுள்ளது என்பது சம்பந்தமாக விரிவாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வந்தார்.

இதன்பிறகு டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்பிய நிலையில்,  பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தார்.  இந்த நிலையில், ஆளுநரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது.  தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனு, விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில்,  ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.