இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளை உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை எடுக்கக் கோரி, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது;
தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு இன்று (10-7-2023) கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM-913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் நன்கு அறிவார் என்றும், தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும், தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும் எனவும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/CMOTamilnadu/status/1678299450085896192?s=20
- பி.ஜேம்ஸ் லிசா








