தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கிறார்கள்.
சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2-வது பசுமை விமான நிலையத்துக்காக நிலத்தை கையகப்படுத்துவதில் உள்ள பிரச்சினை தொடர்பக எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கலாம்? என்பது தொடர்பாக ஆலோசிக்கப்படுகிறது. அதேநேரத்தில் பரந்தூரில் புதிய விமான நிலையத்துக்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வது தொடர்பாகவும், அவர்களுக்கு இழப்பீடு மற்றும் மேலும் சில சலுகைகள் வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆறுமுகசாமி ஆணையம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும் இந்த கூட்டத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது தொடர்பாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்துக்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்துதல், மாநில கல்வி கொள்கை உள்ளிட்டவை பற்றியும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.







