ஆசிய கோப்பை தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை தொடரின் நேற்று நடந்த 2-வது போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நவாஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து களம் இறங்கிய விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இறுதியில் இந்திய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக பேட்டிங் செய்தது மட்டுமின்றி, 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்நிலையில், நீண்ட நாட்களுக்கு பிறகு மிகுந்த எதிர்ப்பார்ப்புக்கிடையே நடந்த இந்த போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு நாட்டு கிரிக்கெட் வீரர்கள் என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். நாட்டின் பல்வேறு பகுதிகளில் இந்திய அணியின் வெற்றியை ரசிகர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
சர்வதேச டி-20 போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் நியூசிலாந்து வீரர் கப்திலை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா முதலிடத்துக்கு முன்னேறினார். ரோகித் இதுவரை 133 டி-20 போட்டிகளில் விளையாடி 4 சதம், 27 அரைசதம் உள்பட 3,499 ரன்கள் எடுத்து முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 3,497 ரன்களுடன் கப்தில் 2-வது இடத்தில் உள்ளார். 3-வது இடத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 3,343 ரன்களுடன் உள்ளார்.