இயற்கை விவசாயம் செய்வோருக்கு, நேரடியாக மானியம் வழங்க தமிழ்நாடு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என உசிலம்பட்டி விவசாயிகள் விடுத்த கோரிக்கைகள் என்னென்ன?
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்கள், இயற்கை வேளாண்மை செய்வதில் பேரார்வம் கொண்டவர்களாகத் திகழ்கிறார்கள் . அதேபோல் மலர் உற்பத்தியிலும் முதன்மை இடத்தில் உள்ளது உசிலம்பட்டி. தேசிய அளவில் புகழ்பெற்ற மதுரை மல்லிக்கு பெருமை சேர்ப்பதில் உசிலம்பட்டி பெரும்பங்கு வகிக்கிறது . இங்கு விளையும் மல்லிகை தான் மதுரை மல்லியின் 75 சதவீத தேவையை நிறைவேற்றித் தருகிறது எனப் பெருமிதம் கொள்ளும் இப்பகுதி விவசாயிகள், மலர் பதப்படுத்தும் கிடங்கு, நறுமண தொழிற்சாலை ஆகியவற்றை தங்கள் பகுதியில் அமைத்துத் தர வேண்டும் என்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இயற்கை விவசாயம் செய்வோருக்கு, நேரடியாக மானியம் வழங்க பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் மழையில் நனைவதைத் தடுக்கும் வகையில் புதிய கிடங்கு அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
பல்வேறு மகளிர் நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, உசிலம்பட்டியில் பெண்களுக்காக ஒரு கல்லூரியையும் ஒரு மேல்நிலைப்பள்ளியையும் அமைப்பதற்கான அறிவிப்பை பட்ஜெட்டில் வெளியிட வேண்டும் எனக் காத்திருக்கின்றனர். மேலும், நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதைப் பாதாள சாக்கடைத் திட்டத்தை உசிலம்பட்டிக்கு அறிவிக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் 20 ஆண்டுகால கோரிக்கையாக இருக்கிறது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் என நான்கு மாவட்டங்களை இணைக்கும் மையப்பகுதியாக உள்ள உசிலம்பட்டிக்கு புறவழிச் சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் முதன்மையான கோரிக்கைகளுள் ஒன்று. தங்களின் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தமிழ்நாடு அரசு பரிசீலித்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிடும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர் உசிலம்பட்டி மக்கள்.