தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த பெண், உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்டார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி இந்திரா காலணியை சேர்ந்தவர் நூஹா மற்றும் அவரது கணவர் சுல்தான். இவர்களுக்கு இரண்டரை வயது ஜெசா என்ற பெண் குழந்தை உள்ளது. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு நாள் கூட்டத்திற்கு நூஹா, அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். இடப்பிரச்னைத் தொடர்பாக மனுகொடுக்க வந்த நிலையில் ஆட்சியரிடம் மனு கொடுத்த பின்னர் தான் மறைத்து வைத்திருந்த அரளி விதையைச் சாற்றைக் குடித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி செளந்தர்யா ஆம்புலன்ஸ் வரவழைத்து தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதுதொடர்பாக நூஹா மற்றும் அவரது கணவர் சுல்தான் கூறுகையில், அரசால் இலவசாமாக வழங்கப்பட்ட வீட்டு மனையை வேறொரு நபரிடம் இருந்து விலைகொடுத்து வாங்கியுள்ளனர். இதனையடுத்து நிலத்தை வாங்கி 22 வருடங்களாகிய நிலையில் அந்த இடத்தை விற்ற நபர் மீண்டும் அந்த நிலம் தன்னுடையது என ஆக்கிரமிக்க முயற்சிப்பதாக் கூறினர். இதுதொடர்பாக ஆட்சியர் அலுவலகத்தில் மூன்று முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து சுல்தான் தன் மனைவி மனு கொடுத்த பின்பு கழிவறை சென்று வருவதாகக் கூறிவிட்டு தனக்கே தெரியாமல் விஷம் அருந்திவிட்டதாகத் தெரிவித்தார்.









