கல்வியில், பெண்கள் இடைநிற்றலை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுவாக இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு கல்வி மற்றும் பொதுசுகாதாரத்தில் சற்று முன்னோடி மாநிலமே, காங்கிரஸ் அதனை தொடர்ந்து வந்த திமுக, அதிமுகவும் அரசும் அதற்கு முக்கிய காரணம் என்றே கூறலாம். மதிய உணவு, சீருடை, சைக்கிள், லேப்டாப், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை, விடுதிகள் மற்றும் ஊராட்சி, ஒன்றிய, மாநகராட்சி ஆரம்ப-தொடக்க- நடுநிலை-உயர்நிலை- மேல்நிலை என சரவாரியாக பள்ளிக்கூடங்கள் தொடங்கப்பட்டு, ’இதனால், என் கல்வி மறுக்கப்படுகிறது’என்ற நிலையில்லாமல் அனைவருக்கும் கல்வி கிடைக்க (Access) வழிவகை செய்துள்ளது. இன்று யூனிசெப் நிறுவன இந்தியா தலைவர் ஹ்யூன் ஹீ பேன் பேசுகையில், மதிய உணவு திட்டத்தால்தான் தமிழ்நாட்டில் அதிகமானோர் கல்வியறிவு பெற்றுள்ளதாக தரவுகள் கிடைத்துள்ளன. தமிழ்நாடு அரசின் செயல்பாடு மகிழ்ச்சியளிக்கிறது. பள்ளி இடைநின்ற மாணவர்களை கண்டறிந்து மீண்டும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் மாணவர்களின் உடல்நலன் மற்றும் இடைநிற்றலை தடுக்க பல்வேறு தகவல்களை ஆசிரியர்கள் சேகரிக்க உத்தரவிட்டுள்ளனர். அந்த உத்தரவில் மாணவிகளுக்கு மாதவிடாய் காலங்களில் உதிரப்போக்கு அதிகமாக உள்ளதா? மாதவிடாய் சீரான இடைவெளியில் வருகிறதா? சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படுகிறதா? உள்ளிட்ட கேள்விகளை கேட்டு பதிவு செய்ய உத்தரவிட்டிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த உத்தரவை சிலர் விமர்சனம் செய்து வரும் சூழலில் கடந்த கால சில நிகழ்வுகளை பார்க்கலாம்.
எய்ட்ஸ் விழிப்புணர்வு: 2000 தொடக்கத்தில் எய்ட்ஸ் பற்றி பல வதந்திகள் பரவின. நோயாளிகளை தீண்டதகாதவர்களை போன்று பார்க்கப்பட்டனர். இந்த நோயை பற்றி மாணவர்களிடையே பெரும் சந்தேகங்கள் மனதிற்குள் இருந்தது. விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒரு பக்கம் நடைபெற்றாலும், மாணவர்கள் இது குறித்து யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அச்சத்தோடு இருந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ குழு ஒவ்வொரு மாணவர்களிடமும் தனித்தனியே அவர்களது சந்தேகங்களை தீர்த்து வைத்தனர். இது அவர்களின் படிப்பில் கவனம் செலுத்த பெரிதும் உதவியது.
ஆண் உறுப்பு சோதனை: விடலை வயதில் மாணவர்கள் சரியாக ஆணுறுப்பை பராமரிப்பதில்லை என்பதை கருத்தில் கொண்டு அவற்றில் ஏதேனும் தொற்று-அரிப்பு உள்ளதா என மருத்துவ குழுவை வைத்து மருத்துவர்கள் சோதனை செய்தனர். அதே சமயம் பெண்களுக்கு சாதாரண மருத்துவ பரிசோதனைகளே நடந்தி வந்தனர்.
இருபாலர் கல்வி நிறுவனங்களில் சிக்கல்: பொதுவாக வயது வந்த பெண்மணிகள் தங்களது மாதவிடாய் காலங்களில் விடுப்பு எடுக்கும்போது, பொதுவெளியில் வைத்து மாணவிகளை ஏன் நேற்று வரவில்லை என கேட்கும் ஆசிரியர்களுக்கு பயந்தும், மாணவர்கள் கேலி செய்வார்கள் என்றும் பல மாணவிகள் பள்ளி செல்வதையே நிறுத்தி உள்ளனர் என்று தரவுகள் கூறுகிறது. கிராமப்புறங்களில் பெண்கள் பள்ளிக்கூடம் என்பது அரிது ஏனென்றால் மேல்நிலைப்பள்ளியில் Number Of Strenth மிகக்குறைவு, இரண்டு மூன்று கிராமங்களுக்கு சேர்த்துதான் மேல்நிலைப்பள்ளியை உருவாக்குவார்கள். மேலும் இருபாலர் பள்ளியில் காதல் விவகாரம் ஏற்பட்டு விடுமோ என்று பெற்றோர்கள் மாணவிகளை பள்ளியை விட்டு நிறுத்தி திருமணம் செய்து வைத்த வரலாறும் உண்டு.
சமூகம்: மாதவிடாய் விசயத்தை மாணவர்கள் கேலி செய்வது தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பெரியவர்களே பெண்கள் உறுப்பை சொல்லி திட்டுவதும் தற்போது வரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. மாதவிடாய் காலங்களில் கோயில் மற்றும் சுபகாரியங்களுக்கு செல்ல கூடாது என எண்ணற்ற கட்டுப்பாடுகள் இருப்பது என்பது வேறுகதை. சமூகத்தில் மாதவிடாய் ஏற்படும் போது அவர்கள் உடலளவில் படும் துன்பத்தை காட்டிலும் மனதளவில் அடையும் துன்பமே அதிகம். நன்கு படித்து உயர் பதவியில் இருக்கும் பெரும்பாலானோரே ’மாதவிடாய் பேடுகள்’ குறித்த விளம்பரங்கள் வந்தால் சேனல்களை மாற்றும் பழக்கம் தற்போதும் உண்டு. இத்தனை விழிப்புணர்வுக்கு மத்தியிலும் இன்னும் சிலர் மாதவிடாய் காலங்களில் துணிகளையும், சாம்பலையும் பயன்படுத்தும் போக்கு உள்ளது. பெரும்பாலான மாணவ, மாணவிகளுக்கு (Borderline Personlaity disorder) தன்மை இருக்கும். அதாவது உடலில் சிறிய அளவில் எதாவது மாற்றம் ஏற்பட்டாலும் அது இந்த நோய்க்கான அறிகுறி என மனதிற்குள் அவர்களாகவே நினைத்து கொண்டு யாரிடமும் கூறலாம் தாழ்வுமனப்பான்மையை வளர்த்து கொள்வார்கள். ஏன் மாதவிடாய் பேடுகளை கூட செய்தித்தாள் கொண்டுதான் கடைக்காரர் கொடுக்கிறார்கள். இவ்வளவு குறைபாடுகள் சமூகத்தில் உள்ள நிலையில் இதனை சரிசெய்ய அரசாங்கம் களமிறங்கிருப்பது பாராட்ட கூடிய விசயமே.
ஆசிரியைகளும் பங்கும் சமூக மாற்றமும்: எந்த ஒரு குறைபாடுகளையும் ஆரம்பத்திலே கண்டறியும் பட்சத்தில் அதை சரிசெய்து விடலாம் என்பதே மருத்துவர்களின் அறிவுரையாக உள்ள நிலையில், பள்ளி மாணவிகளுக்கு இது போன்ற அறிவிப்புகள் மாணவிகள் மத்தியில் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை ஆரம்பத்திலே சரிசெய்து படிப்பில் கவனம் செலுத்துவார்கள் இடைநிற்றல் குறைவும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். மேல்நிலைப்பள்ளி ஆசிரியைகள் பொதுவாக மிகவும் கண்டிப்பானவர்களாக இருந்தாலும், சில விசங்களுக்கு தைரியமாக குரல் கொடுப்பது ஆசிரியைகளே, சக மாணவிகளிடம் கூற மறுக்கும் விசயங்களை ஆசிரியையிடம் கூறவார்கள் என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுதரப்பில் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் ஆசிரியைகள் இவ்விசயத்தில் மிக மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் ஒரு தரப்பினர் கோரிக்கையாக உள்ளது.
ஆரம்பத்தில் கொரோனாவை பெரிய விசயமாக அணுகி அதனை காலபோக்கில் சாதாரண விசயமாக பார்த்த மக்கள் மத்தியில் காலம்காலமாய் பெண்கள் மாதவிடாய் விவகாரத்தை ஒரு பெரிய பிரச்சனையாகவே பார்க்கின்றனர். சமூகம் மாறாதவரை சமூக மாற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் அரசாங்கத்தை குறை கூறாமல் இருப்பது நலமே.
- எழுத்து: மா. நிருபன் சக்கரவர்த்தி







