மேகதாது அணை தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய தீர்மானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
காமராஜரின் பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் காமராஜர் உருவப்படத்திற்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காமராஜர் பிறந்த தினத்தை கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் நாளாக முன்னெடுத்துள்ளதாகவும், பொதுமக்களிடம் முகக்கவசம் உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் தீர்மானத்துக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி துணை நிற்பதாக தெரிவித்த அவர், வரும் காலங்களில் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து கட்சிகளையும் அழைக்க வேண்டும் எனவும், விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்கு விவசாய பிரதிநிதிகளையும் அழைக்க வேண்டும் எனவும் கூறினார்.







