உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்று 6 தொகுதிகளில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ், அனைத்து இடங்களிலும் வெற்றிவாய்ப்பை இழந்தது. இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு முதல்முறையாக ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் தமாகா தலைவர் வாசன்.
அப்போது, வரும் 8ஆம் தேதி முதல் 11 டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செல்ல இருப்பதாக தெரிவித்த வாசன், அதிமுக கூட்டணி வெற்றிக்கு சாதகமாக அமையவில்லை என்றாலும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டோம் என்றார்.
திமுக ஆட்சி தொடங்கி 1 மாதத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில், கொரோனாவை ஒழிக்க வேண்டும் என்பதுதான் அரசின் முதல் பணியாக இருக்கும் எனவும், கொரோனா தடுப்பு பணிகளுக்கு இடையூறாக தமாகா இருக்காது என்றும் குறிப்பிட்ட வாசன், நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தார்.
ஒன்றிய அரசு தொடர்பான கேள்விக்கு, “மத்திய அரசு என்பதைத்தான் தொடர்ந்து பயன்படுத்தி வந்தோம். சொல் எதுவாக இருந்தாலும் மத்திய அரசின் பலத்தை அரசியலமைப்பு சட்டம் வகுத்துள்ளது. அதை மாற்ற முடியாது” என்றார். மேலும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணி தொடரும் என்றும் வாசன் அறிவித்தார்.







