சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார் டி.ராஜா

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி. ராஜா பொறுப்பேற்றார். சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை…

சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி டி. ராஜா
பொறுப்பேற்றார்.

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியாக இருந்த எம்.துரைசாமி நேற்றுடன் பணி
ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி டி.ராஜாவை
பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

மதுரை மாவட்டம், தேனூர் கிராமத்தில் கடந்த 1961ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி
பிறந்தார். பள்ளிப்படிப்பை தேனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியிலும், உயர் கல்வியை
மதுரை பசுமலை பள்ளியிலும், பின்னர் பி.யூ.சி படிப்பை வக்ஃப் வாரிய
கல்லூரியிலும், பி.ஏ. மற்றும் எம்.ஏ. படிப்பை மதுரை கல்லூரியிலும் முடித்த
நீதிபதி டி.ராஜா, சட்டப் படிப்பை மதுரை அரசு சட்டக் கல்லூரியில் முடித்து கடந்த 1988
ஆம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்தார்.

பின்னர், மூத்த வழக்கறிஞர் சி.செல்வராஜிடம் ஜூனியாரக பணியைத் தொடங்கிய ராஜா பின்னர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்தார். சிவில், கிரிமினல்,
அரசியல் சாசன வழக்குகள் நிபுணத்துவம் பெற்றவர். டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ
பல்கலைக்கழக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான ராஜா, கடந்த 2008 ஆம் ஆண்டு
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசின் கூடுதல் வழக்கறிஞராக
பணியாற்றினார். கடந்த 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 தேதி சென்னை
உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்ற நிரந்தர
நீதிபதியாக நியமிக்கப்பட்டார். நீதிபதி டி.ராஜா அடுத்த ஆண்டு மே மாதம் 24 ஆம்
தேதி பணி ஓய்வு பெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  அதன்படி, இன்று நீதிபதி டி. ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி ஆதிகேசவலு இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரிக்க துவங்கியிருக்கிறார்.

நேற்று பொறுப்பு தலைமை நீதிபதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து நீதிபதிகள்
எண்ணிக்கை 54 ஆக குறைகிறது. 75 நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்றத்தில் 21
நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.