சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெறுவதையொட்டி, மூத்த நீதிபதி டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தற்போது பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள துரைசாமி செப்டம்பர் 21ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 22 முதல் தலைமை நீதிபதி பொறுப்பை நீதிபதி ராஜா கவனிப்பார் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பிறப்பித்துள்ளதாக, மத்திய சட்டத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி அண்மையில் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி டி.ராஜா, கடந்த 1961ஆம் ஆண்டு மே 25ஆம் தேதி மதுரை மாவட்டம், தேனூரில்
பிறந்தார். மதுரை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1988, ஜூன்
முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பயிற்சியைத் தொடங்கினார். டெல்லி உயர் நீதிமன்றம், மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் உச்ச
நீதிமன்றத்தில் சிவில், கிரிமினல், அரசியலமைப்பு மற்றும் சேவை சட்டங்கள்
தொடர்பான வழக்குகளில் ஆஜராகி வந்தார்.
2007ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில்
கூடுதல் தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டு பல முக்கிய வழக்குகளில் ஆஜரானார். 2009 மார்ச்சில் சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக
நியமிக்கப்பட்ட அவர் தற்போது மூத்த நீதிபதியாக உள்ளார்.
-ம.பவித்ரா








