நடத்தையில் சந்தேகம் – கர்ப்பிணியை கொன்று உடலை ஆற்றில் வீசிய கணவன் கைது!

ஹைதராபாத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு 5 மாத கர்ப்பிணியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி ஆற்றில் வீசிய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் வடக்கு விகாராபாத் மாவட்டம் போடுப்பால் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரா ரெட்டி. இவர் சுவாதி என்ற பெண்ணை காதலித்து கடந்த 2 ஆண்டுகளுக்கு 20.01.2024 அன்று குகட்பள்ளியில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் ஹைதராபாத்திற்கு குடிபெயர்ந்து போடுப்பலில் வசித்து வந்துள்ளனர். மகேந்திரா ரெட்டி ரேபிடோ ஓட்டுநராக வேலை செய்து வந்த நிலையில் சுவாதி கால் சென்டர் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.

இருவருக்கும் திருமணமான ஒரு மாதத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இது குறித்து கடந்த 22.04.2024 சுவாதி விகாராபாத்தில் உள்ள காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தி சமரசம் செய்து வைத்தனர். இதையடுத்து மனைவி நடத்தையில் சந்தேகபட்டு வேலையைத் தொடரவிடாமல் தடுத்தார். சுவாதி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இந்த நிலையில் சுவாதி மருத்துவ பரிசோதனைக்காக விகாராபாத்திற்குச் சென்று பின்னர் தனது பெற்றோரின் வீட்டில் தங்குவதாக கணவனிடம் கூறியதற்கு மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் திடீரென சுவாதியை காணவில்லை என்று உறவினர்களிடம் மகேந்திரா ரெட்டி தெரிவித்துள்ளார். இதையடுத்து பெண்ணின் உறவினர்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை பார்த்த போது சுவாதி வீட்டில் இருந்து வெளியே சென்ற எந்த காட்சிகளும் பதிவாகவில்லை. கணவன் மகேந்திர ரெட்டி மட்டும் அடிக்கடி ஒரு பையுடன் வெளியே சென்று வந்தது பதிவாகி இருந்தது. இதனால் காவல் துறைக்கு மகேந்திரா ரெட்டி மீது முழுவதும் சந்தேகம் ஏற்பட்டது. பின்னர் ரச்சகொண்டா காவல் ஆணையர் ஜி.சுதீர் பாபு, மல்காஜ்கிரி மண்டல துணை ஆணையர் த பி.வி. பத்மஜா ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மகேந்திரா ரெட்டி தனது மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு ஆஸா பிளேடை வாங்கி 23.08.2025 அன்று மாலை சுமார் 4:30 மணிக்கு கழுத்தை நெரித்து கொலை செய்து அதன் பிறகு, ஆதாரங்களை மறைக்க, அவர் உடலை துண்டு துண்டாக பேக்கிங் செய்து முசி ஆற்றில் வீசியுள்ளார். மேலும் தலை மற்றும் கால் இல்லாத உடலை என்ன செய்வது என்று தெரியாமல் தனது அறையில் வைத்திருந்தார். தற்போது காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.