அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், அவர் வசம் இருந்த துறைகள் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டன.
செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தொடர ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்த நிலையில், துறை இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என கடந்த ஜூன் 16ம் தேதி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி வழக்கறிஞரும், தேசிய மக்கள் கட்சியின் தலைவருமான எம்.எல்.ரவி என்பவர் தாக்கல் செய்த வழக்கு ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கம் செய்வதாக ஜூன் 29ம் தேதி
மாலையில் உத்தரவு பிறப்பித்த ஆளுநர், அடுத்த சில மணி நேரங்களில் அந்த உத்தரவை
நிறுத்திவைப்பதாக தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள புதிய மனுவில், அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கிய உத்தரவை நிறுத்திவைத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் கடிதத்தை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படியுங்கள் : அரசுப் பணிகளில் முதல் தலைமுறைப் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை – தமிழ்நாடு அரசு ஆணை!!
மேலும் அவரது மனுவில், அரசியல் சாசனத்தின்படி ஆளுநர் எடுத்த முடிவை, மறுபரிசீனை செய்ய முடியாது என்றும், நீதிமன்றம் தான் அதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆளுநர் முடிவு எடுத்த பிறகு, வேறு யாருடனும் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.







