மோடி குடும்பப் பெயர் குறித்து அவதூறாக பேசியதாக, தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் கோலாரில், மக்களவைத் தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர், ”அனைத்து திருடர்களும் ஏன் ‘மோடி’ என்ற ஒரே குடும்பப்பெயரை வைத்துள்ளனர்?” என்று பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதையடுத்து , பாஜக எம்எல்ஏவும், குஜராத் முன்னாள் அமைச்சருமான பூர்ணேஷ் மோடி, ராகுல்காந்திக்கு எதிராக சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் ஒட்டுமொத்த ‘மோடி’ சமூகத்தையும் ராகுல்காந்தி இழிவுபடுத்தி விட்டதாக எம்.எல்.ஏ. புர்னேஷ் மோடி கூறியிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக கடந்த 17-ந் தேதி சூரத் குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதிக்கட்ட விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிந்து இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குற்றவியல் நீதித்துறை தலைமை நீதிபதி எச்.எச்.வர்மா இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளார்.
குஜராத் சூரத் நீதிமன்றம் வழங்கிய அந்த தீர்ப்பில், ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பளித்ததோடு, அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கியுள்ளது. மேலும் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக உடனடியாக அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.
- பி.ஜேம்ஸ் லிசா








