கோடநாடு வழக்கில் மறு விசாரணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கோடநாடு கொலை, கொள்ளை, வழக்கில் காவல்துறை மறு விசாரணை நடத்த தடை கோரி சாட்சிகளில் ஒருவரான அனுபவ் ரவி என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தொடர்ந்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், விக்ரம் நாத், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
தற்போது ஆளும் கட்சி மாறியதால், அரசியல் காரணங்களுக்காக இந்த விவகாரம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றிருப்பதாக மனுதாரர் அனுபவ் ரவி சார்பில் வாதிடப்பட்டது. மறு விசாரணை என்பது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இருக்க வேண்டும், ஆனால் இங்கு அவ்வாறு விதிமுறை கடைபிடிக்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கோடநாடு வழக்கின் மேல் விசாரணை விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை என கருத்து தெரிவித்தனர். மேலும், அனுபவ் ரவி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.







