சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அரசு சட்டக் கல்லூரி புதிதாக தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ரகுபதி அறிவித்தார்.
சட்டப்பேரவையில் சட்டம் மற்றும் சிறைத்துறை சார்பில் பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் ரகுபதி வெளியிட்டார். அரசு சட்டக் கல்லூரிகளில் அதிவேக இணைய வசதியுடன் கூடிய கம்பியில்லா மின் மண்டலம் நிறுவப்படும் என அப்போது அவர் தெரிவித்தார்.
அரசு சட்டக் கல்லூரிகளில் சர்வதேச பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள் மற்றும் சட்ட மாநாடுகள் நடத்தப்படும் என தெரிவித்த அமைச்சர், புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும், தென்காசியில் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கப்படும் என்பது உள்ளிட்ட அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய அரசு சட்டக் கல்லூரி தொடங்கப்படும் எனக் கூறிய அமைச்சர் எஸ்.ரகுபதி, சிறைகளில் கொரோனா தொற்று இல்லை என்றும், சிறைவாசிகளுக்கு 100 சதவீத தடுப்பூசி செலுத்திய ஒரே மாநிலம் தமிழ்நாடுதான் என்றார்.
கைதிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய சிறைச்சாலைகள் அமைக்கப்படும் என கூறிய அமைச்சர் ரகுபதி, சிறைகளை சீர்திருத்த மையங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.







