இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனை கீழடி அகழாழ்வில் முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கீழடியில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணியை 2015-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை மேற்கொண்டது. இதன் மூலம் தமிழர் நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. இதற்கிடையில் 3 கட்டத்துடன் அகழாய்வுப் பணிகளை மத்திய அரசு நிறுத்தியது. இதற்கு தொல்லியல் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள் அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவிடம் இருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, அப்போதைய அதிமுக அரசு, தமிழக தொல்லியல் துறை மூலம் அகழாய்வுப் பணியை மேற்கொண்டது. தொடர்ந்து நடந்த 4, 5 மற்றும் 6-ம் கட்ட அகழாய்வுகள் மூலம் ஏராளமான தொல்பொருட்கள் கிடைத்தன. ஆனால், 7-ம் கட்டம் மற்றும் தற்போது நடந்து வரும் 8-ம் கட்ட அகழாய்வுப் பணியில் எதிர்பார்த்த அளவு தொல்பொருட்கள் கிடைக்கவில்லை. மேலும் 8-ம் கட்ட அகழாய்வில் குறைந்த ஊழியர்களே ஈடுபட்டுள்ளதால் பணி மந்தமாக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிகாரிகளும் பெரிதாக அக்கறை காட்டவில்லை. பணி முடிவடைய ஒரு மாதமே உள்ள நிலையில், குறைந்த அளவே தொல்பொருட்கள் கிடைத்துள்ளன.
இந்நிலையில், இரு நாட்க ளுக்கு முன்பு கீழடிக்கு வந்த தென்னிந்திய ஆலயத் திட்ட, மத்திய தொல்லியல்துறை கண்காணிப் பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘தற்போது நடக்கும் அகழாய்வு சரியான இடத்தை தேர்வுசெய்து நடக்கவில்லை. அகழாய்வில் அனுபவம் உள்ளவர்களையே பணியமர்த்த வேண்டும். அப்போதுதான் சரியான முடிவு கிடைக்கும் என்றார்.
இது குறித்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;- கீழடியில் 8-ஆம் கட்ட அகழாய்வை சரியான இடத்தை தேர்வு செய்து நடத்தவில்லை என இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பளார் அமர்நாத் ராமகிருஷ்ணன் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 1924 -ஆம் ஆண்டு சிந்து சமவெளி நாகரிக அகழாய்வுக்கு பிறகு இந்திய வரலற்றில் மிகப்பெறிய மாற்றத்தை கீழடி அகழாய்வு ஏற்படுத்தியுள்ளது. இந்த அகழாய்வை மேற்கொண்ட அமர்நாத் ராமகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளதை தமிழக முதல்வர் தனது கவனித்தில் கொள்ள வேண்டும். கீழடியில் முதன்முதலாக அகழாய்வு செய்து தமிழரின் மிகத் தொன்மையான வரலாற்றுச் சுவடுகளை உலகுக்கு வெளிப்படுத்திய அமர்நாத் ராமகிருஷ்ணன் தற்போது மத்திய அரசில் பணியாற்றி வருகிறார்.
அவரை தமிழகத் தொல்லியல் துறைக்கு அனுப்பும் படி மத்திய அரசிடம் கேட்டுப் பெற்று, கீழடி அகழாய்வில் அவரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கையில் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.







