சபரிமலை கோவில் பிரசாதம் பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் – தேவசம் போர்டு அறிவிப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.   கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை…

சபரிமலை ஐயப்பன் கோவில் பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருகின்றனர். தமிழ் மாதப்பிறப்பு மற்றும் மண்டல பூஜை, படி பூஜை, மகர விளக்கு, மகரஜோதி தரிசனம் என பக்தர்கள் சபரிமலை ஐயப்பனை தரிசித்துச் செல்வார்கள்.

 

ஐயப்ப பக்தர்கள் தரிசனம் முடிந்து திரும்பிச் செல்லும்போது சபரிமலையில் இருந்து பிரசாதங்களான அரவணை பாயசம், அப்பம், நெய். விபூதி, குங்குமம் ஆகியவற்றை வாங்கி வந்து தங்கள் குடும்பத்தாருக்கும், உறவினர்கள், நண்பர்களுக்கும் கொடுப்பது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவிலில், உண்ணியப்பம், வெல்ல நைவேத்தியம், சர்க்கரை பாயசம், அவல் பிரசாதம் போன்றவற்றை மலையாள பிராமணர்கள் மட்டுமே செய்ய வேண்டும் என்று தேவசம் போர்டு சார்பில் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கேரள அரசிற்கும், மனித உரிமை ஆணையத்திற்கும் புகார்கள் வந்தன. இந்த விளம்பரம் சமதர்மத்துக்கு எதிராக உள்ளது என்று கலாச்சார பேரவை தலைவர் சிவன் கண்டித்திருந்தார். இதனையடுத்து, சபரிமலை பிரசாதத்தை பிராமணர் அல்லாதவர்களும் தயாரிக்கலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.

 

குறிப்பாக, 2001-ம் ஆண்டிலேயே விளம்பரங்களில் சாதி சார்ந்த பாகுபாடு காட்டக் கூடாது என்று மனித உரிமைகள் ஆணையம் தீர்ப்பளித்திருந்தாலும், அது பின்பற்றப்படவில்லை. தற்போது, நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்த சாதியவாத நடைமுறை நிறுத்தப்பட்டுள்ளது. கேரள அரசின் இந்த தீர்ப்பிற்கு பல்வேறு தரப்பினரும் பாரட்டு தெரிவித்து வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.