அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை தொடர்பான புகாரில், காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜராகாததால் 3-வது முறையாக காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மதுரை தபால் தந்தி நகரில் உள்ள அமலாக்கத்துறை மண்டல துணை அலுவலகத்தில் பணிபுரிந்த அங்கித் திவாரி எனும் அதிகாரி திண்டுக்கல் மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மதுரை அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் 13 மணி நேரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தினர். லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடத்திய சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு டிஜிபியிடம் அமலாக்கத்துறை மதுரை மண்டல துணை அலுவலகத்தின் உதவி இயக்குநர் புகார் அளித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அந்த புகாரில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் 35 பேர் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து பல்வேறு ஆவணங்களை எடுத்துச் சென்றதாக தெரிவித்திருந்தார். அமலாக்கத்துறை புகாரினை விசாரிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவின் பேரில் மதுரை தல்லாகுளம் காவல்துறையினர் அமலாக்கத்துறை அலுவலர்கள் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கடந்த வாரம் நேரில் சம்மன் அளிக்க சென்றனர். ஆனால், அமலாக்கத்துறை அலுவலர்கள் சம்மனை பெற்றுக் கொள்ளவில்லை.
இதனையடுத்து 2 ம் முறையாக நேற்று காலை 11 மணியளவில் தல்லாகுளம் காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தார்கள். அமலாக்கத்துறை மதுரை துணை மண்டல உதவி இயக்குநர் பிரிஜேஸ் பெனிவால் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணைக்கு ஆஜராக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தல்லாகுளம் காவல்துறை அனுப்பிய சம்மனுக்கு அமலாக்கத்துறை அலுவலர்கள் இரவு வரை வராததால் அமலாக்கத்துறைக்கு 3 ஆம் முறையாக சம்மன் அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.