ஏற்காடு கோடை விழா மே 26 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறவுள்ளதையொட்டி, சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, சேலத்தில் அமையவுள்ள ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா, டைடல் பார்க் மற்றும் ஒருங்கிணைந்த வெள்ளிக்
கொலுசு உற்பத்தி மற்றும் விற்பனை மையம் அமைய உள்ள இடங்களில் அமைச்சர் நேரு
இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
சேலம் மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையை ஏற்று சேலத்தில் ஒருங்கிணைந்த
ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்றும், டைடல் பார்க் நிறுவப்படும் என்றும், வெள்ளிக் கொலுசு உற்பத்தி மற்றும் ஒருங்கிணைந்த விற்பனை மையம் உருவாக்கப்படும்
என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதற்கான இடங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் தேர்வு செய்யப்பட்டு இருந்தது.
அந்த இடங்களை இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு
மேற்கொண்டார். சேலம் கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரிக்கு அருகே அமைய உள்ள டைடில் பார்க் இடத்தை முதலில் அமைச்சர் நேரு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் கார்மேகம், அங்கு எவ்வளவு இடம் உள்ளது , டைடல் பார்க் எவ்வாறு நிர்மாணிக்கலாம் என்பது குறித்து அமைச்சரிடம் விளக்கினார்.
இதைத்தொடர்ந்து, இரும்பாலை சாலையில் உள்ள அரியாகவுண்டம்பட்டியில்
ஒருங்கிணைந்த வெள்ளிக் கொலுசு உற்பத்தி மையம் மற்றும் விற்பனை மையம்
அமைப்பதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலத்தை பார்வையிட்டு, அதில் எத்தனை கடைகள் வரவுள்ளன என்பது குறித்து அமைச்சர் நேரு, மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து, சேலம் பர்ன் அன் கோ நிறுவனம் பின்புறம் ஒருங்கிணைந்த ஜவுளிப்
பூங்கா அமைப்பதற்காக 198 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்த
இடத்தையும் அமைச்சர் நேரு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், அவர் செய்தியாளரிடம் கூறுகையில், சேலம் மாவட்ட மக்களின் நலனுக்காக
தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படி, நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். அதற்காக சேலத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தையும் ,
அதேபோல வெள்ளிக் கொலுசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த வெள்ளி உற்பத்தி மையம் மற்றும் விற்பனை மையக் கட்டிடம் கட்டுவதற்கான இடத்தையும், டைடல் பார்க் அமைய உள்ள இடத்தையும் நேரில் ஆய்வு செய்தோம். இது குறித்து தமிழக முதல்வரிடம் எடுத்துக்கூறி விரைவில் இத்திட்டம் தொடங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும், கோடை வாசஸ்தலமான ஏற்காட்டில் வருகிற 26-ஆம் தேதி கோடை விழா துவங்குகிறது. ஒரு வார காலம் நடைபெறும் இந்த கோடை விழாவையொட்டி சுற்றுலாப்
பயணிகளைக் கவர பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன . மலர்க் கண்காட்சி மற்றும்
மாம்பழக் கண்காட்சி சிறப்பாக நடத்திட ஏற்பாடு செய்யப்பட உள்ளதாகவும், பயணிகளின் வசதிக்காக சேலத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம்
வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட செயலாளருமான
ராஜேந்திரன், சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரான டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.