திருச்சி அருகே கொடுத்த கடனை கேட்டு தனியார் நிதி நிறுவனம் நெருக்கடி கொடுத்ததால் இளைஞர் ஒருவர் தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்றுள்ளார்.
திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை பகுதியை சேர்ந்தவர் சேகர் (58). இவர்
சொந்தமாக வெல்டிங் பட்டறை வைத்து நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 2019-ஆம் ஆண்டு தனியார் நிறுவனம் ஒன்றில் வீடு கட்டுவதற்காக சுமார் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி உள்ளார். இந்நிலையில் ஒரு வருட காலம் சரியாக தவணை செலுத்தியுள்ளார். பின்பு கொரோனாவால் தொழில் முற்றிலும் நலிவடைந்து வருமானமின்றி தவித்ததால் தவணை தொகையை முற்றிலும் செலுத்தாமல் இருந்திருக்கிறார்.
இந்நிலையில், சேகரை தங்கள் நிறுவனத்திற்கு அழைத்து சென்ற அலுவலர்கள் கடனை செலுத்தாவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என கடுமையாக எச்சரித்து அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த சேகர் கண்டோன்மண்ட் சாலையில் உள்ள மாவட்ட நீதிமன்றம் அருகே தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.







