தொழிற்சங்கத் தலைவர்கள் மீது வீண் பழி சுமத்துவதா? சு.வெங்கடேசன் எம்.பி கடிதம்

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ்நாடு கிராம வங்கி பழிவாங்குகிறது என்று சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார். இதுபற்றி இந்திய வங்கி நிர்வாகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: வங்கியின் வளர்ச்சி,…

தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தமிழ்நாடு கிராம வங்கி பழிவாங்குகிறது என்று சு. வெங்கடேசன் எம்.பி கூறியுள்ளார்.

இதுபற்றி இந்திய வங்கி நிர்வாகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

வங்கியின் வளர்ச்சி, வாடிக்கையாளார் சேவை, ஊழியர்கள் நலன் குறித்து அக்கறை கொள்ளாமல் ஒரு மோசமான நிர்வாகத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம்.

வங்கியின் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்படவில்லை. அடிக்கடி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டு வங்கியின் பணி தடைபடுகிறது. நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ் போன்ற முக்கிய பண பரிவர்த்தனைகள் முடங்கி விடுகின்றன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தொழில்நுட்ப வசதி கூட தமிழ்நாடு கிராம வங்கியில் இல்லை.

குழுக்களுக்கு கடன் வாங்கி கொடுத்து, அதை வசூலித்து திரும்ப செலுத்துவது போன்ற வணிகத்தின் குறிப்பிடத்தக்க அளவை என்.ஜீ.ஓக்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறது நிர்வாகம். பல இடங்களில் குழுக்களிடம் வசூலித்து அதை வங்கியில் செலுத்தாத போக்கு அதிகரித்து வருகிறது. இது வங்கியின் எதிர் காலத்துக்கே பேராபத்தாய் முடியும்.

இது போன்ற முக்கிய பிரச்சினைகளைப் பேசுவதாலும், முன்னெடுப்பதாலும் அங்குள்ள தொழிற்சங்கங்கள் மீது வன்மம் கொண்டு விரோதமாக நடந்து கொள்கிறது. தொழிற்சங்கத் தலைவர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பழிவாங்குகிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் ஒரே கிராம வங்கியான, தமிழ்நாடு கிராம வங்கி. அதன் வளர்ச்சி யிலும், நலனிலும் அக்கறை கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் என்னும் பொறுப்போடு, அதனைக் கட்டுப்படுத்தும் இந்தியன் வங்கித் தலைமைக்கு ஏற்கனவே இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 2 கடிதங்கள் எழுதி இருந்தேன். இந்தியன் வங்கி நிர்வாகமும் இதில் தலையிட்டு சரி செய்வதாக சொல்லி இருந்தார்கள்.

ஆனால், இன்று வரை தமிழ்நாடு கிராம வங்கியில் உள்ள பிரச்சினைகள் சரி செய்யப்பட வில்லை. அதன் நிர்வாகம் மேலும் மோசமாக நடந்து வருகிறது. எனவே இந்திய வங்கி நிர்வாகத்துக்கு மீண்டும் ஒரு கடிதத்தை எழுதி இருக்கிறேன்.
இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.