வேலூர்-கண்ணமங்கலம் பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான முறையில் தொங்கியபடி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை- ஆரணி-வேலூர் ஆகிய மூன்று நகர்ப்புறங்களை ஒன்று சேர்க்கும் மையப்பகுதியாக கண்ணமங்கலம் விளங்குகிறது. இந்த பகுதியை சுற்றி உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப்புறங்களில் இருந்து வேலூருக்கு சென்று பயிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இவர்கள் தினமும் கண்ணமங்கலம் பகுதியில் இருந்து தான் பேருந்தில் பயணம் செய்கின்றனர். ஆனால் ஏராளமான மாணவர்கள் செல்லும் இந்த நெடுஞ்சாலையில் சொற்ப அளவில் அரசு நகர்புற பேருந்துகள் இயங்குவதால் பொதுமக்கள் பயணம் செய்யவே அந்த பேருந்து சரியாக உள்ளது.
இதில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பயணம் செய்வது சிரமமாக உள்ளது. இதனால் காலை வேளையில் கூட்டம் அதிகமாக இருக்கும் போது கல்லூரி செல்லும் மாணவர்களை ஏற்றி செல்லாமல் காக்க வைத்துவிட்டு நிற்காமல் பேருந்துகள் சென்று விடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவ்வாறு ஒரு சில பேருந்துகள் நிற்காமல் செல்லும் போது மாணவர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து ஓடிச்சென்று பேருந்துகளில் பயணம் செய்யும் பதைபதைக்க வைக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேருந்துகள் நிற்காததால் கல்லூரி செல்ல முடியாமல் ஒரு சில கல்லூரி மாணவிகள் தினமும் பேருந்து நிலையத்தில் காத்திருந்து காத்திருந்து வீடு திரும்பி செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் கல்லூரி மாணவர்களின் கல்வி கேள்விக் குறியாகவே உள்ளது. தினமும் கண்ணமங்கலம் பகுதியில் இருந்து வேலூருக்கு கல்லூரி மாணவர்கள் பயணம் செய்ய அரசு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்பதே கல்லூரி மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.