ஆன்லைன் கேமில் பணத்தை இழந்த மாணவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்துள்ள குரும்பட்டி மாரி கொட்டாய் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் வெங்கடேஷ் (20). 12ம் வகுப்பு படித்து முடித்துவிட்டு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையில் மூன்று வருடங்களாக நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக அவருடைய தந்தை செல்போன் வாங்கி கொடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
முதலில் ஆன்லைன் வகுப்புகள் மற்றும் பாடங்கள் சம்பந்தமான குறிப்புகள் உள்ளிட்டவற்றில் தீவிரமாக படித்து வந்த வெங்கடேஷ் நாளடைவில் கேம்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளார். இந்த ஆர்வம் அதிகமாகவே பணம் கட்டி கேம்களில் விளையாட ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து விளையாடியதில் தன்னிடம் இருந்த பணம் அனைத்தையும் இழந்துள்ளார்.
மேலும் தொடர்ந்து விளையாடுவதற்கு பணம் இல்லாததால் வீட்டிலிருந்த நகையை தனியார் நகை அடகு கடையில் அடகு வைத்து அந்த பணத்தில் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார். அப்பொழுது அதில் 50 ஆயிரம் ரூபாயை இழந்துள்ளார். இதில் மனவிரக்தி அடைந்தவர் கடும் மன உளைச்சலில் கடந்த 7ம் தேதி வேறுவழியின்றி எலி பேஸ்ட் சாப்பிட்டுஉயிரிழப்புக்கு முயன்றுள்ளார். அவரை அவரது பெற்றோர் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெங்கடேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். மாணவர்கள், இளைஞர்கள் அதிகளவில் ஆன்லைன் கேம்கள் மற்றும் சூதாட்டங்களை ஈடுபட்டு பணத்தை இழந்து மன உளைச்சலில் உயிரை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகியுள்ளது. இதனைத் தடுப்பதற்கு தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்திற்க்கு தடைவிதிக்க வேண்டும் என்பது பல்வேறு பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.