சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை -காவல்துறை ஐஜி எச்சரிக்கை

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார். கடந்த 8 தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தென்காசி மற்றும்…

தமிழ்நாட்டில் சட்டவிரோதமாக கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்மண்டல காவல்துறை ஐஜி அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

கடந்த 8 தேதி தென்காசி மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கொட்டப்படும் கேரள மாநில
கழிவுகளினால் ஏற்படும் சுகாதாரம் மற்றும் சுற்று சூழல் சீர்கேடுகள் குறித்தும், இப்பிரச்சனையை களைய தமிழக காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தமிழக டிஜிபி சைலேந்திரபாபுக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அதன் பேரில் தமிழக கேரளா எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி
மாவடத்தில் கேரளாவிலிருந்து கோழி இறைச்சி கழிவுகள்,நெகிழி கழிவுகள் போன்றவை
சட்டவிரோதமாக கொட்டப்பட்டு வருவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க தமிழக
காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு அனைத்து எல்லையோர மாவட்ட காவல்
கண்காணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டார்.

தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு சரக்கு ஏற்றி செல்லும் வாகனங்கள் திரும்ப வரும் போது குறைந்த பணத்திற்கு ஆசைப்பட்டு அங்குள்ள இடைத்தரகர்கள் மூலம் கழிவுகளை ஏற்றி வந்து இங்கு கொட்டிவிடுகின்றனர்.மேலும் தமிழகத்திலிருந்து கேரளாவில் பழைய இரும்பு
வியாபாரம் செய்யும் பலர் அங்குள்ள நபர்களின் கடைகளில் குப்பைகளிலிருந்து பழைய
இரும்பை பிரித்து எடுத்து விட்டு பின்பு மீதமாகும் உபயோகமில்லா குப்பையினை
தமிழக எல்லைக்குள் சட்டவிரோதமாக கடத்துகின்றனர்.

இவற்றை தமிழகத்தில் உள்ள சில இடைத்தரகர்களின் உதவியோடு ஆள் நடமாட்டம்  இல்லாத இடங்களில், கொட்டி செல்கின்றனர். இது சம்பந்தமாக தமிழக கேரளா எல்லையோர மாவட்டத்திலுள்ள கன ரக உரிமையாளர் கூட்டமைப்பினரிடம் கலந்தாய்வு கூட்டங்கள் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் தென்காசி மாவட்டத்திலுள்ள திருவேங்கடம்
காவல் நிலையத்தில் இரு வழக்குகளும், ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும்
பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை தனிப்படை அமைத்து இவ்வழக்குகளின்
குற்றவாளிகளை கண்காணித்து, ஏழு கன ரக வாகனங்களை பறிமுதல் செய்தும், ஒன்பது
நபர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக கேரள எல்லையோர சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது. மேலும் தென்காசி மாவட்டத்திற்குள் இது போன்று சட்ட விரோதமாக புளியரை சோதனை சாவடி வழியாக நுழைய முயற்சித்த நாற்பத்தைந்து வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மேற்படி வாகனங்கள் கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்னாரா என்பவரின் தொடர்
கண்காணிப்பு மற்றும் நடவடிக்கையினால் ஊத்துமலை காவல் நிலைய சரகத்தில் கடந்த
13ஆம் தேதியன்று பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பயளில்லாத பழைய டயர்கள் அடங்கிய
கழிவுகளை கேரளாவிலிருந்து கொண்டு வந்த புளலூரைச் சேர்ந்த கிருஷ்ணகுமார்
மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த இடைதரகரான கருப்பசாமி ஆகியோர் மீது வழக்கு
பதிவு செய்யப்பட்டு இருவரை கைது செய்ததுடன் கழிவுகளை ஏற்றி வந்த கனரக
வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் கேரளாவிலிருந்து உயிர் மருத்துவ கழிவுகள் கொண்டு வரப்பட்டு தமிழகத்தில்
கொட்டப்படுவதை தடுப்பதற்கு, தென்மண்டலத்திற்கென ஒரு பிரத்யேக சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில் சம்மந்தபட்டுள்ள இடைத்தரகர்கள் பற்றிய தகவல்களை சேகரித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கர்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.