ஹோட்டலுக்குள் நுழைந்து முக்காடு போட்டு பணம் கொள்ளையடித்த கொள்ளையர்கள், சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு சாவகாசமாக தப்பிச் சென்ற நிகழ்வு சிவகாசி அருகே நடந்தேரியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அய்யம்பட்டி காந்தி நகரில் ஆனந்தராஜ் என்பவர் ஓட்டலும், மளிகை கடையும் நடத்தி வருகிறார். வசூலான பணத்தை ஆனந்தராஜ் ஓட்டலுக்குள் வைத்து செல்வது வழக்கம். அதை போல, பணத்தை லாக்கரில் வைத்து விட்டு வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனை அறிந்து, கொள்ளையர்கள் இவரது ஓட்டலுக்குள் புகுந்தனர். கல்லாபெட்டியை உடைத்து வசூலான ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரத்தை கொள்ளையடித்து சென்றனர். மேலும் ஓட்டலில் சப்பாத்தி போட்டு சமைத்து சாப்பிட்டு விட்டு சாவகாசமாக கொள்ளையர்கள் சென்றுள்ளனர். மறுநாள் ஓட்டலுக்கு வந்த உரிமையாளர் ஆனந்தராஜ் கொள்ளை சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
அங்கிருந்த சிசிடிவி காட்சியை ஆய்வு செய்த போது, லுங்கியால் தலையில் முக்காடு போட்டு கொண்ட வரிசை கட்டி கொள்ளையர்கள் ஓட்டலுக்குள் புகுந்தனர். 2 கொள்ளையர்கள் தங்களை சிசிடிவி கேமிரா காட்சிகள் மூலம் அடையாளம் கண்டுபிடித்து விடாமல் இருக்க லுங்கியை அவிழ்த்து தலையில் போர்த்திக் கொள்வதும், ஒரு கொள்ளையன் மட்டும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் உள்ளே நுழைவதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
பணத்துடன் சேர்த்து மளிகை பொருட்களையும் கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து உரிமையாளர் ஆனந்தராஜ் சிவகாசி நகர காவல் நிலையத்திற்கு ஆனந்தராஜ் தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பதிவு செய்திருந்த சிசிடிவி காட்சிகளை முழுமையாக போலீசார் ஆய்வு செய்தனர். மேலும் அதே பகுதியில் இருந்த 25 சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
இது போன்று கொள்ளையடிக்கும் பழைய குற்றவாளிகளின் விவரங்களை எடுத்து போலீசார் ஒப்பிட்டு பார்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையர்கள் கடைக்குள் நுழைந்து சமைத்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







