20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால்
மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசைப் போலவே மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி தமிழக பாஜக சார்பில் கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் 5,000க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர். சென்னை மட்டுமல்லாது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாஜக தொண்டர்கள் இந்த பேரணியில் கலந்துகொண்டனர்.
காவல் துறை தடையை மீறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்
நடைபெற்ற இந்த பேரணியில், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, துணைத் தலைவர் லீபி துரைசாமி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய அண்ணாமலை, கச்சத்தீவை மீட்பதற்கு பிரதமர் மோடி முயற்சித்து வருகிறார். அடுத்த இருபது நாட்களுக்குள்ளாக பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால் மாவட்டம்தோறும் பாஜக சார்பில் போராட்டம் நடத்தப்படும். அப்போதும் குறைக்கவில்லை எனில் அடுத்த பத்து நாட்களில் திருச்சியில் பாஜக சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்படும் என எச்சரித்தார்.
தங்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை என கூறிய அண்ணாமலை, பத்திரிக்கையாளர் போர்வையில் அதிமுக ஆதரவாளர்கள் இருப்பதையே எதிர்ப்பதாகவும் கூறினார்.








